உஷார்..! மாமிசம் உண்ணும் பாக்டீரியா தாக்கி இளைஞர் பலி.. சதைகளை பிய்த்து தின்ற கொடூரம்!
கொல்கத்தா: கீழே விழுந்து காயமடைந்த இளைஞர் ஒருவர், மாமிசம் உண்ணும் அரிய வகை பாக்டீரியாவால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாக்டீரியா குறித்து மருத்துவர்கள் கூறும் தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் இருக்கும் போதே சதைகளை பிய்த்து தின்னும் இந்த பாக்டீரியா, கடைசியில் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடுமாம்.
கீழே விழுந்து காயமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியதன் அவசியத்தை இந்த பயங்கர சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்
கொல்கத்தாவை சேர்ந்தவர் மிரின்மாய் ராய் (36). தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தினமும் மின்சார ரயிலில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், கடந்த 18-ம் தேதி வேலைக்கு சென்று ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது, கூட்டநெரிசலில் சிக்கி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு பகுதியில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அலட்சியத்தின் விலை..
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதலுதவி அளித்து காயம் செப்டிக் ஆகாமல் இருப்பதற்காக ஊசியும் போட்டு வீட்டுக்கு அனுப்பினர். அடுத்த இரண்டு நாட்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், மிரின்மாய் ராய் அதன் பின்னர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. "மருத்துவர்கள்தான் ஊசி போட்டுவிட்டார்களே பிறகென்ன.. என்ற ரீதியில் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால் அந்த அலட்சியம்தான் அவரது விதியை மாற்றத் தொடங்கியது.

ஸ்கேனை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்
இரண்டு நாட்களுக்கு மேலாகியும் அவரது இடுப்பில் காயம் ஆறாததோடு, சீழும் வடிந்துள்ளது. அப்போது கூட அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி மிரின்மாய் ராய்க்கு உடல் முழுவதும் தாங்க முடியாத வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் எந்த சிகிச்சை அளித்தும் அவரது காயம் குணமாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஏனென்றால், அவரது இடுப்பு முதல் அவரது ஆணுறுப்பு வரை உட்புறம் இருக்கும் சதைப்பகுதிகள் காணாமல் போயிருந்தன. அந்த இடம் முழுவதும் வெற்றிடமாக இருந்துள்ளது.

மாமிசம் உண்ணும் பாக்டீரியா
பின்னர் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலுக்குள் 'நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ்' (Necrotizing fasciitis) என்ற மாமிசம் உண்ணும் பாக்டீரியா புகுந்திருப்பது தெரியவந்தது. இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிட்டால் உள்ளே இருக்கும் சதைகளை அசுர வேகத்தில் தின்று தீர்த்துவிடும். இதனால் இந்த பாக்டீரியா தாக்கியவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது. அதன்படியே, இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மிரின்மாய் ராய் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

அலட்சியம் வேண்டாம் - மருத்துவர் அறிவுரை
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஹிமான்ஸு ராய் கூறுகையில், "கீழே விழுந்து சிறிய காயம் ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் காயத்தின் வழியாக உடலுக்குள் சென்றுவிட பல வகையான பாக்டீரியாக்களும, வைரஸ்களும் முயற்சிக்கும். அதில் மாமிசம் தின்னும் 'நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ்'என்ற பாக்டீரியாவும் ஒரு வகை. இது மிகவும் அரிய வகை பாக்டீரியா என்ற போதிலும், இது மனிதர்களை தாக்குவது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்துவிட்டால் முதல் வேலையாக ரத்த செல்களை சாப்பிட்டு விடும். இதனால் ரத்த ஓட்டம் தடைப்படும். பின்னர் இந்த பாக்டீரியாக்கள் சதையை பிய்த்து தின்ன தொடங்கும். இந்த பாக்டீரியா தாக்கினால் மரணம் நிச்சயம். எனவே, கீழே விழுந்து காயப்பட்டால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications