என்ன கொடுமை இது..? ஆட்டோ ஓவராக சத்தம் போட்டதற்காக, டிரைவர் உருட்டு கட்டையால் அடித்து கொலை
மைசூரூ: ஆட்டோவில் இருந்து அதிகமாக சத்தம் வந்ததால் அதன் டிரைவரை உருட்டுக்கட்டையால் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நடந்துள்ளது.
மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகேயுள்ள பிலிகெரே என்ற ஊரை சேர்ந்தவர் சீனிவாஸ் (40). இரு குழந்தைகளின் தந்தையான இவர், ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று காலையில், ஆட்டோவை கிளப்பியபோது, ஸ்டார்ட் ஆக மறுத்தது. எனவே ஆட்டோவை சரி செய்வதற்காக ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். இந்த சத்தத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசகவுடா என்பவர் விழித்தெழுந்துள்ளார்.
கோபத்தில் வெளியே வந்த வெங்கடேசகவுடா, ஆட்டோவை ரிப்பேர் செய்வதை உடனே நிறுத்தும்படி சீனிவாசிடம் கூறியுள்ளார். ரிப்பேரை சரி செய்ய வேண்டியிருப்பதால் சத்தம் வரத்தான் செய்யும் என்று சீனிவாஸ் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேசகவுடா, உருட்டுக்கட்டையை எடுத்து வந்து சீனிவாஸ் தலைமீது அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சீனிவாஸ் உயிரிழந்தார்.
தகவலறிந்த சீனிவாஸ் உறவினர்கள், வெங்கடேஸ்கவுடாவை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா நடத்தினர். விசாரணை நடைபெற்றுவருகிறது.












Click it and Unblock the Notifications