வளர்ப்பு மகளிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட 51 வயது தந்தை.. பாலியல் வன்மத்தின் உச்சகட்டம்!
மீரட்: உத்திரப்பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தைக்குத் தாயான தனது 27 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நில்லாமல் மிகவும் கொடூரமாகவும் நடந்து கொண்ட 51 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மீரட் பகுதியில் உள்ள ராஜீவ்புரம் குடியிருப்பில் 5 மகள்களுடன் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அக்குடும்பத் தலைவர் குடிகாரர். இவரது 27 வயது வளர்ப்பு மகளுக்கு திருமணமாகி ஐந்து வயதில் மகன் உள்ளான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கணவரைப் பிரிந்த அவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்துள்ளார் தந்தை. தனது மனைவியையும், தடுக்க வந்த மூத்த மகளையும் அவர் அடித்துள்ளார். தாயாரை அடிக்க மூத்த மகள் எதிர்த்ததால், கோபமடைந்த அந்நபர் மகள் என்றும் பாராமல் முடியைப் பிடித்து இழுத்துச் சென்று தனி அறையில் அடைத்துள்ளார். அங்கு மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இரும்புக் கம்பியால் மகளின் அந்தரங்க உறுப்பில் செருகி கொடூரமாக நடந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகளை மீட்ட குடும்பத்தார் உடனடியாக லாலா லஜ்பதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமானியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
கர்ப்பப் பைக்கு அதிக பாதிப்பில்லாத போதும், அதீத ரத்தப்போக்கினால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்ணிற்கு மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இதற்கிடையே, இது தொடர்பாக அத்தந்தை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பலாத்காரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றும், தந்தை தாக்கியதாக மட்டும் கூறப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அத்தந்தை அடிக்கடி குடிபோதையில் குடும்பத்தாரை தாக்குவது வழக்கமான சம்பவம் தான் என்றும், இம்முறை அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கம்பக்கத்தாரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் தந்தையைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.