8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த மாமாவை மொட்டையடித்து, செருப்பு மாலை போட்ட மக்கள்
புர்த்வான்: மேற்கு வங்க மாநிலத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமாவுக்கு பொதுமக்கள் மொட்டையடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புர்த்வான் மாவட்டம் ராணிகஞ்சில் உள்ள சத்யம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 1ம் தேதியில் இருந்து தனது சகோதரியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் தனது மாமாவின் சில்மிஷம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த நபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் பெண்கள், சிறுமிகளில் ஏராளமானோர் தெரிந்தவர்கள், உறவினர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதுடன், சில்மிஷத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications