சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பன்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜையை ஒட்டி தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைகள் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.
நடைதிறந்த முதல் நாளில் இருந்தே ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்ததால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.

வழக்கமாக மண்டல பூஜை காலங்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதுபோல இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இம்முறை இரவு 11.45 மணிக்கு தான் நடை அடைக்கப்பட்டது. எனினும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
மண்டல பூஜை தொடங்கி ஒரு மண்டலம்(41 நாட்கள்) இன்றுடன் முடிவடைவதால் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கிகள் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது. தங்க அங்கி ஊர்வலத்திற்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது.
கண்டரரு மகேஷ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கிகளை பெற்றுக் கொண்டு கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றனர். பின்னர் தங்கஅங்கிகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்றும் ஐய்யப்பனுக்கு தங்கஅங்கி சாத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.
அப்போது, சன்னிதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தங்கஅங்கியில் ஜொலித்த சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு அத்தாழ பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து இவ்வருட மண்டல பூஜைகள் முடிவடைகிறது.
மகரவிளக்கு பூஜை
வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி சிறப்பு வாய்ந்த மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications