அரசியலுக்கு வருகிறார் மந்த்ரா.. ரோஜாவுக்கு கிராக்கி குறையுமா?
ஹைதராபாத்: ஆந்திர அரசியல் வானில் மேலும் ஒரு திரை நட்சத்திரம் மின்னப் போகிறது. அவர் நடிகை மந்த்ரா.
அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்தவை. தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திராவும் அப்படித்தான். அங்கும் சினிமாவில் நடித்துப் புகழ் பெற்று விட்டால் அடுத்து அரசியலில் தொபீர் எனக் குதிப்பது வழக்கம்.
நடிகர், நடிகையர் பலர் ஆந்திர அரசியல் களத்தில் ஐக்கியமாகியுள்ளனர். இந்தநிலையில் புதுமுகமாக நடிகை மந்த்ராவும் அரசியலில் குதிக்கவுள்ளார்.

தெலுங்கு, தமிழ்ப் படங்களில் ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்தவர் மந்த்ரா. பிறகு காதல் கொண்டு திருமணமாகி, குழந்தையும், குடித்தனமுமாக மாறிப் போனார்.
கவர்ச்சி தேவதையாக வலம் வந்த அவர் திருமண வாழ்க்கைக்குப் பின்னர் பருமனாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியும் போனார். இந்த நிலையில் அவருக்கு திடீரென அரசியல் ஆசை வந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகிறாராம் மந்த்ரா. இதுதொடர்பாக கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

தனது குழந்தையின் பிறந்த நாளையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினரிடம் ஆசி பெறுவதற்காகவே போனதாக கூறியுள்ளார் மந்த்ரா. இருப்பினும் அவர் விரைவில் கட்சியில் இணைவார் என்று சொல்கிறார்கள்.
ஏற்கனவே ஜெகன்மோகன் கட்சியில் நடிகை ரோஜா இருக்கிறார். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட போராளி போலவே அவர் அதிரடியாகவும் செயல்பட்டு வருகிறார். அதே பாணியில் மந்த்ராவையும் களம் இறக்குமா ஜெகன் மோகன் ரெட்டி கட்சி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மந்த்ரா வந்தால் ரோஜாவின் கிராக்கி குறையுமா என்ற பரபரப்பு ரோஜா தரப்பிலும் எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications