"தில்வாலே” சர்ச்சை - மங்களூரு பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள்
மங்களூரு: மங்களூருவில் "தில்வாலே" படத்திற்கு தடை விதித்த பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு எதிராக களத்தில் குதித்தால், பெண் ஆர்வலரை பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்துள்ளனர் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கடந்த திங்களன்று, பஜ்ரங் தள் மாநில பொறுப்பாளரான ஷரண் மற்றும் சில கட்சிப் பிரமுகர்கள் மீது "தில்வாலே" படத்தை தடையிடக் கோரி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக மங்களூரு வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் இப்புகாரை அளித்த வித்யா தின்கர் என்னும் பெண் ஆர்வலரின் பேஸ்புக் பக்கத்தில் தவறான சித்தரிப்புகளும், பகிரங்கமாக பலாத்காரம் செய்யப்படுவார் என்ற மிரட்டல்களும் பதிவிடப்பட்டன. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் வித்யா.
சகிப்புத்தன்மையின்மை குறித்து பேசியதால் ஷாருக்கான் நடித்த "தில்வாலே" படத்தினை திரையிட அங்கு தடை விதிக்க வேண்டும் என்று பஜ்ரங் தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
"அப்படத்திற்கு டிக்கெட்டுகள் வாங்கிவிட்டு தியேட்டருக்கு சென்றவர்களுக்கு, திரையரங்கத்தில் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தியேட்டர் திரைகளையும் அவர்கள் கிழித்துள்ளனர். எனினும், நீண்ட கால நலனை யோசித்து புகார் அளிக்க திரையரங்க உரிமையாளர்கள் முன்வரவில்லை" என்று தின்கர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்களுடைய அட்டகாசம் அதிகரித்ததால் வித்யா இன்னும் சிலருடன் சேர்ந்து புகார் அளித்துள்ளார். இந்த நிலையிலேயே வித்யாவிற்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் போராட்டக் குழுவினைச் சேர்ந்த விஷமிகள் சிலர்.












Click it and Unblock the Notifications