மணிபூர் தாக்குதலுக்கு மூளையான தீவிரவாதிகளின் தலைவர் கப்லாங் எங்கே?
இம்பால்: மணிபூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதிகளின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியமானது.
மணிபூரில் 18 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகளில் சிலரை இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் வைத்து அழித்தது. மணிபூர் கொலை குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியம்.
மணிபூர் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றி தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. அண்மை காலத்தில் சக்திவாய்ந்த தலைவராக உருவாகியுள்ள கப்லாங் குறித்தும் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது.

கப்லாங் எங்கே?
என்.எஸ்.சி.என்-கே என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளவர் கப்லாங். மணிபூர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அந்த அமைப்பின் தலைவர் கப்லாங்கிற்கு மியான்மரின் தாகாவில் ஒரு வீடும், சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒரு வீடும் உள்ளது. யுனான் மாகாணத்தில் பலமுறை காணப்பட்ட உல்பா தீவிரவாதி பிரகாஷ் பருவாவுடன் கப்லாங்கிற்கு தொடர்பு உள்ளது.

சீனா
மணிபூர் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழிக்கும் என்று எதிர்பார்த்த கப்லாங் தாகாவில் இருந்து வெளியேறி யுனான் மாகாணத்திற்கு தப்பியோடியிருக்க வேண்டும் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது ஆட்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

சக்திவாய்ந்தவர்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளிடையே கப்லாங் தான் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர். அவர் உல்பா, கேஎல்ஓ உள்பட பிற வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளை யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஆப் வெஸ்டர்ன் சவுத் இந்தியா என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து அதற்கு தலைவர் ஆனார்.

விசாரணை
மணிபூர் தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு மாதிரிகள் உள்ளிட்டவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.சி.என்.-கே அமைப்பு இந்த தாக்குதலை நடத்த ஒரு மாதத்திற்கும் மேல் திட்டமிட்டு ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications