மதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை.. குமுறி கொட்டிய வைகோ.. ஆனாலும் அசராமல் எடுத்த முடிவு
கோவை: திமுக, அதிமுகவை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது தவெக. இதனால் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலமாக இருந்த திமுக கூட்டணி உடைந்து, தவெக கூட்டணியாக உருவாகியுள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் தவெக தோழமை கட்சியாக கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் காணாமல் போய்விட்டனர். ஆனாலும் தவெகவை நோக்கி எதிர்க்கட்சிகள் வீசும் கேள்வி கணைகளை எதிர்கொள்ளும் கேடயமாக மதிமுக இருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் எப்போதும் பத்திரிகையாளர்களை மதித்து நடப்பவன். கடந்த காலத்தில் பொடா சட்டத்திற்கு எதிராக நான் போராட்டங்களை நடத்தியவன். பத்திரிகையாளர்கள் மீது அந்தச் சட்டம் பாய்வதைத் தடுப்பதற்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்களிடம் நேரடியாக வலியுறுத்தி, அந்தச் சட்டத்திலிருந்து பத்திரிகையாளர்கள் விடுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளேன்.

திமுக கூட்டணியில் அவமரியாதை
சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் என்னை புண்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டு கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு இருப்பது போன்று எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆளுநரின் செயல்பாடு கவலையளிக்கிறது. 'மிஸ்டர் கவர்னர்' அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளில் ஆளுநர் தலையிடுவதை ஏற்க முடியாது. விவசாய நிலங்களுக்கு சென்று அவரே பணிகளை மேற்கொள்வதாகக் கூறுவது முறையல்ல. 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி மாநில ஆட்சிகளைக் கலைக்கும் போக்கிற்கு எதிராக அண்ணா காலத்திலிருந்தே தங்களின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.
கவர்னர் ஆட்சியை ஒருபோதும் ஏற்க முடியாது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடமே நான் கூறினேன். திமுக, அதிமுக செய்வது என்ன பெருச்சாளி பேரமா. திமுக கூட்டணியிலிருந்து மதிமுக ஏன் வெளியேறியது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். எங்கள் கட்சி நடத்தப்பட்ட விதம் தொண்டர்களை மிகுந்த அவமரியாதைக்கு உள்ளாக்கியது. மற்ற கூட்டணி கட்சிகளை நடத்துவது போல எங்களை நடத்தவில்லை. ஒரு இடத்தில் கூட மதிமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
மதிமுக எம்எல்ஏக்கள் காணவில்லை
எங்கள் கட்சியின் தொண்டர்கள் திமுக உடனான உறவை எக்காலத்திலும் விரும்பவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது எங்களைச் சிறுமைப்படுத்தியதாகத் தொண்டர்கள் கருதினார்கள். அதனால் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுதான் அணை கட்டத் தூண்டுகிறது. மக்கள் கொந்தளித்து எழுந்தால் மட்டுமே மத்திய அரசுக்கு அச்சம் ஏற்படும். இந்த பிரச்சனைக்காக அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் நடைபயணத்தை வரவேற்கிறேன்.
மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் காணாமல் போய்விட்டனர். மற்ற கட்சிகள் எம்எல்ஏக்களுடன் சென்று தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கள் எம்எல்ஏக்கள் திமுக பக்கம் சென்றுவிட்டனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிரணியினர் வீசும் அனைத்துக் கணைகளையும், எதிர்கொள்ளும் கேடயமாக மதிமுக இருக்கும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications