"படுக்கப்போட்டு நெஞ்சுலேயே குத்துறா சார்".. ஆண்களை காக்க தேசிய மனித உரிமைக்குழு அமைப்பு!
பெங்களூர்: பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் உரிமைகளை பாதுகாக்க கர்நாடகத்தில் ஆண்கள் பாதுகாப்புக்கான தேசிய மனித உரிமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில் இந்த குழு எப்படி செயல்படும்? அதன் நோக்கம் என்ன? என்பது பற்றிய இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் உள்ளது. ஆனால், ஆண்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டங்கள் எதுவும் இல்லை.

இதனால், ஆண்களின் உரிமையை பாதுகாக்க நாடு முழுவதும் ஆண்கள் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆண்கள் பாதுகாப்புக்கான தேசிய மனித உரிமைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான தொடக்க விழா மண்டியா மாவட்டத்தில் நடைபெற்றது. கர்நாடக பாஜக எம்எல்சியுமான விஸ்வநாத் தொடங்கி வைத்தார். இதுபற்றி விஸ்வநாத் கூறியதாவது:
''ஆண்கள் பாதுகாப்பிற்கான 'தேசிய மனித உரிமை குழு' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. பெண்கள் எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும், அது உடனடியாக ஊடகங்கள், போலீசார் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இருப்பினும், ஆண்களுக்கு எதிரான வன்முறை அல்லது துன்புறுத்தல்களுக்கு அதிக கவனம் கிடைக்கவில்லை.
ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் பற்றி பேச யாரும் இல்லை. ஆனால் மகளிருக்கு என்று தனியே காவல் நிலையம் உள்ளது. அங்கும் ஆண்களுக்கு சில நேரங்களில் அநீதி இழைக்கப்படும். தரக்குறைவாக பேசப்படுவது உண்டு.
இதனால் ஆண்களின் உரிமைகளை பாதுகாப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும், பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
சமீபத்தில் மைசூரு, ஹாசன் மற்றும் மண்டியா மாவட்டங்களில் பெண்களால் ஆண்களுக்கு எதிராக நடந்த சில வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, காவல்துறை ஆண்களின் புகார்களை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரவும், அதற்கான தீர்வை வழங்கவும் இந்தக் குழு செயல்படும்.
இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும். கர்நாடக அரசும், ஆண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கவும் ஆண்கள் நல ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார். கர்நாடகத்தில் ஆண்கள் பாதுகாப்பு குழு தொடங்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications