அம்பாசமுத்திரத்தில் மட்டும் கவனம்.. மீண்டும் தனித்து களமிறங்கும் நாம் தமிழர்.. சீமான் எடுத்த முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாதக தனித்து போட்டியிட்டாலும் மற்ற தொகுதிகளில் பெரிதாக கவனம் செலுத்த வேண்டாம் என்றும் பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக நேரடியாக தங்கள் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. திருச்சி கிழக்கு தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அதேபோல் திமுகவிலும் இடைத்தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. அதிமுகவில் இருந்து சாரை சாரையாக தவெக பக்கம் நிர்வாகிகள் நகர்ந்து வரும் சூழலில், அந்த நேரத்தில் தான் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்ய முடியும். இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டது.
நாதக நிர்வாகிகளும் விஜய்யின் எழுச்சி காரணமாக, கூட்டணி அமைத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும் என்று கருதி வந்தனர். ஆனால் சீமான் மீண்டும் தனித்து களமிறங்கும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் நாதக நிர்வாகிகள் தலையில் கை வைத்திருக்கின்றனர். அப்போது அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
மற்ற தொகுதிகளில் பெரிதாக ஆர்வம் காட்ட தேவையில்லை என்று பேசியுள்ளார். இதனால் நாதக நிர்வாகிகள் ஓரளவிற்கு சீமான் முடிவுக்கு கட்டுப்பட்டிருக்கின்றனர். சீமானின் இந்த முடிவுக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது திமுகவுடன் கூட்டணி அமைத்தால், நாதக நிர்வாகிகள் மொத்தமாக திமுக பக்கம் நடையை கட்ட தொடங்கிவிடுகிறார்கள் என்று சீமான் அஞ்சுகிறார்.
இதனிடையே ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சீமான் திருமண நிகழ்ச்சிகளில் தனித்தனியாக சந்தித்திருக்கிறார். இதனால் சீமான் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு வந்துவிட்டாரோ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இதனால் இடைத்தேர்தல் அறிவிப்பு வரை நாதகவினர் அமைதியாக இருக்க முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications