மணிப்பூர்: 'மோரே' யுத்த களமானது- உக்கிர மோதல்- தமிழர்கள் கதி என்ன? மத்திய அரசுக்கு அவசர கடிதம்!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. மோரே நகரில் குக்கி இனத்தை சேர்ந்த ஆயுத குழுவின் கை ஓங்கி உள்ளதால் மத்திய அரசின் உதவியை மாநில அரசு அவசரமாக கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. மோரே நகரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் 10 மாதங்களாக மைத்தேயி, குக்கி இன மக்களிடையே மோதல் நடைபெற்று வருகிறது. மைத்தேயி இன மக்களுக்கு அரசும் பாதுகாப்பு படையும் ஆதரவாக இருக்கிறது என்பது குக்கி இன மக்களின் குற்றச்சாட்டு. குக்கி இனமக்களில் ஒரு பிரிவினர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளூர் காவல் நிலையங்களில் கொள்ளையடித்தும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகவும் பெறப்படுகிற ஆயுதங்கள் குக்கி குழுவினருக்கு சாதகமாக இருந்து வருகிறது.

மோரே நகரில் மோதல்: மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரம் கடந்த சில மாதங்களாகவே அதிகமான மோதல்களை சந்தித்து வருகிறது. இந்த மோரே நகரில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். குக்கி- மைத்தேயி மோதலில் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குக்கிகள் கை ஓங்குகிறதா?: இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோரே நகரில் குக்கி ஆயுத குழுவினரின் கை ஓங்கி இருக்கிறது. பாதுகாப்பு படையினர் மீதான குக்கிகளின் தாக்குதலில் 2 போலீஸ் கமாண்டோ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மோரே நகரில் இருந்து இம்பால் செல்லும் பாதையை குக்கி பெண்கள் முற்றுகையிட்டு தடை செய்தும் உள்ளனர். இதனால் மோரே நகரம் இம்பாலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு அவசர கடிதம்: இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, மத்திய அரசுக்கு அவசரமாக கடிதம் அனுப்பி உள்ளது. அதில், மோரே நகரை தரைவழியாக சென்றடைவதில் சிரமம் உள்ளது. ஆகையால் மத்திய அரசு, விமானப் படை ஹெலிகாப்டர்களை உடனடியாக மோரேவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ், மைத்தேயி கவுன்சில் உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் மோரே நகரில் நீடித்து வரும் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மாநில பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த மோதல்களால் தமிழர்கள் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. மோரேவில் உள்ள தமிழர்களை தொடர்பு கொள்ளவும் முடியாத நிலைமை இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications