கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்- குக்கி இன பெண் அமைச்சர் வீடு தீக்கிரை- புதிய மோதலில் 11 பேர் பலி!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் மாநில பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புதிய தாக்குதல் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை.

மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியால் இந்த இனமோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இம்மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது. மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு இம்பால் உள்ளிட்ட சில பகுதிகளில் இரு குழுக்களிடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இம்மோதல்களில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதலில் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20க்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மணிப்பூர் பெண் அமைச்சர் Nemcha Kipgen என்பவரது வீடும் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குக்கி இனக் குழுவினரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் ஏற்கனவே பல ஆளும் பாஜக அமைச்சர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர் மணிப்பூர் மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சர்.
Video footage of Kuki-Zo MLA Nemcha Kipgen burnt down by Meitei Mobs in Lamphel, Imphal today. pic.twitter.com/wwGBdUxAKl
— ITLF Media Cell (@ITLFMediaCell) June 14, 2023
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நிலைமையை ஆராய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அம்மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் இன்று வரை ஜூன் 15 வரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மணிப்பூர் வன்முறை தொடர்பான பல தகவல்கள் வெளியாகவும் இருக்கின்றன என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications