பேராசிரியராகும் மன்மோகன்சிங்... படித்த பஞ்சாப் பல்கலை.யில்!
சண்டிகர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தாம் படித்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

அதன் பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கபட்டார். அதே நேரத்தில் தனது ஆரம்ப காலத்தில் பேராசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங், தற்போது பஞ்சாபில் தான் படித்த பல்கலை கழகத்திலேயே பேராசிரியராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதாயம் பெறும் பதவிகள் வகிக்க கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதால், பஞ்சாப் பல்கலை கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றுவது ஆதாயம் தரும் பணியா என மத்திய அமைச்சரவையிடம் கருத்து கேட்டிருந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு கூடி விவாதித்தது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்கலாம். அது ஆதாயம் தரும் பணியில் வராது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங் பேராசிரியராக பணியாற்ற தடை இல்லை என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.












Click it and Unblock the Notifications