கோவா "லூயிஸ் பெர்ஜர் ஊழல்"- லஞ்சம் வாங்கிய காங். அமைச்சர்களை பாரிக்கர் அம்பலப்படுத்துவார்- பா.ஜ.க.!
பனாஜி: கோவா மாநிலத்தை உலுக்கி வரும் லூயிஸ் பெர்ஜர் ஊழல் சர்ச்சையில் லஞ்சம் வாங்கிய முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களின் பெயர்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அம்பலப்படுத்துவார் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
கோவாவிலும் அஸ்ஸாமின் குவஹாத்தி நகரிலும் குடிநீர் விநியோகம், வடிகால் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ரூ.6 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பெர்ஜர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் யார் என்ற விவரத்தை அமெரிக்க நிறுவனம் வெளியிடவில்லை. இந்த விவகாரம் கோவா அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து கோவா முன்னாள் முதல்வரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் கூறுகையில், திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் எல்லா உண்மைகளும் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோவா பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுபாஷ் பஹல்தேசாய், விசாரணை அமைப்புகளிடம் யார் அந்த 2 அமைச்சர்கள் என்ற விவரத்தை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுவார் எனத் தெரிவித்தார். மேலும் லூயிஸ் பெர்ஜர் நிறுவன திட்டத்தின் போது பொதுப்பணித்துறை அதிகாரியாக இருந்தவர் ஆனந்த் வாஷசுந்தர். அவரை அந்தத் திட்டத்தில் இருந்து நீக்கினால் ஒருவேளை லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் பெயரை சொல்லக் கூடும் என்றார்.