பீஹாரில் ரயில் நிலையம் மீது தாக்குதல்- தீ வைப்பு- ஊழியர்களை கடத்திய மாவோயிஸ்டுகள்!!
பீஹார் மாநிலத்தில் ரயில் நிலையத்தை தாக்கி அங்கிருந்த ஊழியர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று உள்ளனர்.
ஜமல்பூர் : பீஹார் மாநிலத்தில் ஜமல்பூர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றை தாக்கிய மாவோயிஸ்டுகள் அங்கிருந்த ரயில்வே ஊழியர்களை கடத்திச் சென்று உள்ளனர்.
பீஹார் மாநிலத்தின் ஜமல்பூர் பகுதியில் மசூதன் ரயில் நிலையம் உள்ளது. ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மாவோயிஸ்டுகள் குழு ஒன்று அங்கிருந்த ஐந்து ரயில்வே ஊழியர்களை கடத்தி சென்றுள்ளது.
மேலும், ரயில் நிலையத்தின் சிக்னல் கட்டுப்பாட்டு அறையையும் சூறையாடி தீ வைத்துள்ளது மாவோயிஸ்டு கும்பல். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, எதற்காக இந்த தாக்குதல் நடந்து உள்ளது என்று இதுவரை தெரியவில்லை. கடத்திச் செல்லப்பட்ட ஐந்து ஊழியர்களில் மூவர் மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஒரு ஊழியர் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றார்.
#Bihar : Naxals attacked Masudan Railway Station, late last night & torched station property. pic.twitter.com/bzMlRbOqwE
— ANI (@ANI) December 20, 2017
இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, மசூதன் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருவரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.