சுதந்திர தினம்.. கறுப்பு நாளாக கடைபிடித்த மாவோயிஸ்டுகள்! பாதுகாப்பு படை அதிகாரி சுட்டுக் கொலை!!
மல்காங்கிரி: நாட்டின் விடுதலை திருநாளை மாவோயிஸ்டுகள் இன்று கறுப்பு நாளாக கடைபிடித்தனர். அத்துடன் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
நாடு முழுவதும் 68வது சுதந்திர தின நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த சுதந்திர நாளை மாவோயிஸ்டுகள் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.
இதனால் ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இயக்கப்படவில்லை. அத்துடன் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் எந்த ஒரு வாகனப் போக்குவரத்தும் கூட இயக்கப்படவில்லை.
மல்காங்கிரி மாவட்டத்தின் பல பொது இடங்களில் மாவோயிஸ்டுகள் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்திருந்தனர். அம்மாவட்டத்தில் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு படை அதிகாரி சுட்டுக் கொலை
இதனிடையே சுந்தர்கார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் அருகே மாவோயிஸ்டுகள் கறுப்புக் கொடியை போட்டுவிட்டு சுதந்திர தினம், கறுப்பு நாள் என்ற நோட்டீசுகளையும் வீசி சென்றுள்ளனர்.