பீகாரில் மோடி போஸ்டர்கள் கிழிப்பு- பேனர்கள் சேதம்- மாவோயிஸ்டுகள் 'துக்க தினம்' கடைபிடிக்க அழைப்பு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி நாளை செல்ல உள்ள நிலையில் அவரது பேனர்கள் சேதப்படுத்தப்பட்டு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் மோடி வருகை தரும் நாளை துக்க தினமாக கடைபிடிக்குமாறும் முழு அடைப்பு நடத்துமாறும் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. நிதிஷ்குமார் இருமுறை பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று முதல்வரானார். பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29-ந்தேதி முடிவடைவதால் அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய ஜனதா தளம்- பாரதிய ஜனதா கூட்டணி முறிந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.
இதனால் இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு இல்லாமல் நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். ஆனால் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் நிதிஷ் கூட்டணி அமைத்துள்ளார்.
இதேபோல் பாரதிய ஜனதாவும் நிதிஷ்குமாரை வீழ்த்தி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காத்திருக்கிறது.
இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது 2வது கட்டமாக கயா உள்ளிட்ட மேலும் 3 பிரசார கூட்டங்களில் நாளை பிரதமர் மோடி ஆதரவு திரட்ட உள்ளார். இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக கயா மற்றும் மாவட்டம் முழுவதும் மோடியை வரவேற்றும், நிதிஷ்குமார் ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டியும் போஸ்டர்களும், பேனர்களும் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் பல இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்கிவிட்டு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பேனர்களையும், போஸ்டர்களையும் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் வைத்து உள்ளனர்.
இதனிடையே பீகாருக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து துக்க தினமாக கடைபிடிக்குமாறும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துமாறும் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.