ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்ட 6 பேர் ஜூலை 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்.

இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் உட்பட 6 பேர் மீது, கடந்த 8 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் போதிய முகாந்திரம் இருப்பதால்,தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் வரும் ஜூலை 11ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார். மேலும் சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையையும், அன்றைய தினத்திற்கே நீதிபதி ஒத்திவைத்தார்












Click it and Unblock the Notifications