லாத்தூரில் தண்ணீர் பஞ்சம்: திருமணம் கிடக்கு, முதலில் தண்ணீர் பிடிக்கணும்
லாத்தூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரில் தண்ணீர் கொண்டு வந்த ரயிலை பார்த்த பெண் தனது மகளின் திருமணத்திற்கு தயாராவதை கூட விட்டுவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா பகுதியில் உள்ள லாத்தூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் மக்கள் குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். 8 முதல் 9 நாட்களுக்கு ஒரு முறை தான் கார்பரேஷன் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் மக்கள் நீரை சேமிக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் மிராஜ் பகுதியில் இருந்து லாத்தூருக்கு ரயில் மூலம் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுவரை ஜல்தூத் ரயில் மூலம் 9 முறை மிராஜில் இருந்து லாத்தூருக்கு ண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. 10வது முறையாக நீரை ஏற்றிக் கொண்டு மிராஜில் இருந்து கிளம்பிய ரயில் புதன்கிழமை காலை லாத்தூரை அடைந்தது.
ஜல்தூத் ரயிலை காண ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். பலர் ரயிலை ஆசை ஆசையாய் தொட்டுப் பார்த்தனர்.
இந்நிலையில் இது குறித்து லாத்தூரை சேர்ந்த கவிதா காம்ப்ளி கூறுகையில்,
இன்று மதியம் 12.30 மணிக்கு எனது மகளுக்கு திருமணம். ரயில் நல்லவேளை இன்று காலை வந்தது. திருமணம் இருக்கட்டும் நான் முதலில் தண்ணீர் பிடித்து வைக்கப் போகிறேன். 9 பேர் இருக்கும் எங்கள் வீட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications