ஆக்ரா கட்டாய மதம் மாற்றம்: முக்கிய குற்றவாளி நந்தகிஷோர் வால்மீகி கைது!
லக்னோ: ஆக்ராவில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பிவிட்டதாக அறிவித்த தர்ம ஜக்ரிதி மஞ்ச் என்ற இந்துத்துவா அமைப்பின் நிர்வாகி நந்தகிஷோர் வால்மீகியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7-ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே கட்டாயமாக முஸ்லிம்களை இந்து மதத்துக்கு மாற்றியதாக தர்ம ஜக்ரிதி மஞ்ச் அமைப்பு நிர்வாகிகள் மீது ஆக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் தர்ம ஜக்ரிதி மஞ்ச் அமைப்பின் நிர்வாகியுமான நந்தகிஷோர் வால்மீகியை தேடி வந்தனர்.
அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.12 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டது. போலீசார் ஏற்கனவே வால்மீகியின் மகன் ராகுல் உள்பட 2 பேரை பிடித்தனர். தொடர்ந்து நடந்த வேட்டையில் வால்மீகி நேற்று சிக்கினார்.
விசாரணையில் குண்டர் சட்டத்தில் கைதான அவர் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார் என்பது தெரியவந்தது. மத மாற்ற வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications