ஹிமாச்சலில் கனமழை.. சரிந்து விழுந்த மேம்பாலம்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக முக்கிய மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கனமழைக் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

சரிந்த மேம்பாலம்
இந்த நிலையில் சோலன் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோலன் பகுதியில் அமைந்துள்ள இந்த மேம்பாலம், கல்கா-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதையை இணைக்கிறது. இதனால் இந்த மேம்பாலம் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.

உயிரிழப்பு இல்லை
வழக்கமாக அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் இந்த மேம்பாலத்தில், கனமழை காரணமாக பெரியளவில் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் மேம்பாலம் சரிந்த போது, உயிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 பேர் பலி?
அதேபோல் குல்லு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காடெல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டனர். இந்தத் தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். புதையுண்டவர்களின் பெயர்கள் சவேலு தேவி கிரித்திகா என்பது தெரியவந்துள்ளது. இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவு
இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறுகையில், நேற்று இரவு முதல் ஹிமாச்சலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குல்லு மற்றும் மண்டி பகுதிகளில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications