அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: ரூ. 2000 வரை மட்டுமே ரொக்கமாக தரலாம்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
டெல்லி: லோக்சபாவில் 2017 -18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். ஒவ்வொரு அறிவிப்புக்கும் பாஜக உறுப்பினர்கள் டேபிளை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் எம்.பிக்கள் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
கிராம புற வளர்ச்சி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம், மகளிர் மேம்பாடு, விவசாய கடன் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜெட்லி. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜெட்லி.

கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பட்டியலிட்டார் அருண் ஜெட்லி. அதுவரை உற்சாகமாக பட்ஜெட் உரையை கேட்டுக்கொண்டிருந்த பாஜக எம்.பிக்களின் மத்தியிலும் கூட லேசாக சலசலப்பு எழுந்தது. அது அரசியல் கட்சிகளுக்கு அருண் ஜெட்லி வைத்த செக்தான்.
அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும் என்றும், அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்தார். இதற்கு தகுந்தார் போல ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாக கூறினார். அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என்றார்.
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரொக்க பண பரிமாற்றத்தை தடுத்து டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும்போது ரொக்கமாக ரூ. 2000 மட்டுமே தர முடியும். அதற்கு மேல் போனால் செக் அல்லது டிஜிட்டல் முறை மூலமாக மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு இதற்கு முன்பு வரை ரூ. 20,000 வரை ரொக்கமாக தர முடியும் என்ற நிலை இருந்தது இதனை தற்போது 2000 ருபாயாக ஆக குறைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய ஜெட்லி எல்லாம் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications