உ.பி. சட்டசபை தேர்தலில் வெல்ல மத கலவரத்தை தூண்ட பாஜக சதி... மாயாவதி சாடல்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெல்வதற்காக அம்மாநிலத்தில் மத வன்முறைகளைத் தூண்டிவிட பாஜக சதி செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கி உள்ளன.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் கைரனா பகுதியில் இந்துக்களை விட முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர். அங்கு அவர்கள் இந்துக்களை விரட்டியடிப்பதாக பாரதிய ஜனதா எம்.பி. ஹூக்கும்சிங் புகார் கூறி இருந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் ஹூக்கும்சிங் பின்னர் தம்முடைய கருத்துகளை மாற்றிக் கொள்வதாக கூறியிருந்தார். அப்பகுதியில் இருந்து இந்துக்களும் முஸ்லிம்களும் தாங்களாகவே பொருளாதார காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக குழு ஒன்று நிலைமைகளைக் கண்டறிய கைரானா பகுதிக்கு செல்ல உள்ளது. இதனிடையே பாஜக எம்.பி. ஹூக்கும்சிங் கருத்துகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் வறுமை காரணமாக வேலை தேடி பெருநகரங்களுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மாநில அரசுதான் காரணம். உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தாததால் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இதற்கு பாரதிய ஜனதா எம்.பி. வேறு காரணத்தை கூறுவது தவறான செயல். உத்தரபிரதேசத்தில் மாநில மேல்சபை தேர்தலிலும், ராஜ்யசபா தேர்தலிலும் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதனால் மாநிலத்தில் கலவரத்தை தூண்டி விட்டு இதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என கருதுகின்றனர். இதற்கான நீண்டகால சதித்திட்டத்தை அவர்கள் தீட்டி உள்ளனர். இதற்காக மக்களை திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இது உத்தரபிரதேச மாநில மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு மாயாவதி கூறினார்.












Click it and Unblock the Notifications