மின்னணு எந்திரத்தில் மோசடி செய்துள்ளனர்.. மறு தேர்தல் தேவை.. ஜெ. மாதிரியே பேசும் மாயாவதி!
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்றும், தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் மறு வாக்குப் பதிவு தேவை என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜக 318 இடங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மாயாவதி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. அதில் எந்த பொத்தானை அழுத்தி வாக்களித்தாலும் அவை அனைத்தும் பாஜகவுக்கு சேர்ந்துவிடும் வகையில் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இந்த முடிவுகள் நம்பும்படியாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து. பெரும்பாலான முஸ்லிம் தொகுதிகளில் அவர்கள் அளித்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியான பாஜகவுக்கு முஸ்லிம் சமூகத்தினர் எப்படி வாக்களித்தனர் என்பதை நம்ப முடியவில்லை. எனவே மாநிலத்தில் மறுதேர்தல் வைக்கப்பட வேண்டும் என்றார் மாயாவதி.
மறைந்த ஜெயலலிதாவும் கூட இப்படித்தான் முன்பு சட்டசபைத் தேர்தலில் இதே போன்ற புகாரைக் கூறி வந்தார். ஆனால் தேர்தலில் ஜெயித்ததும் கப்சிப் என்றாகி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications