மோடியை ஜெயா, மமதா, முலாயம் ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மட்டேன்: மாயாவதி திட்டவட்டம்
லக்னோ: மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ்கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, டைம்ஸ் நவ் டிவிக்கு நேற்று அளித்த பேட்டியில், தேர்தல் பிரசாரம் வேறு.. அரசியல் என்பது வேறு.. நாங்கள் பெரும்பான்மை பெற்றாலும் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோருவோம் என்று தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பட்டும் படாமலும் பதிலளித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்ட போதும் ஒன்றுக்குக் கூட நேரடியாக மோடி பதிலளிக்கவில்லை. இதனால் தேர்தலுக்குப் பின் பாஜக அணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என்ற கருத்து உருவானது.
இந்நிலையில் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா, மமதா மற்றும் என்னுடைய ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடி நேற்று அளித்த பேட்டியிலும் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் பகுஜன் சமாஜூடன் கூட்டணிக்கு வாய்ப்பிருப்பது போல பேசினால் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக வாக்குகளை பெற்றுவிடலாம் என மோடி நினைக்கிறார். அது ஒருபோதும் நடைபெறாது.
நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் ஆகியோர் ஆதரித்தாலும் நான் ஆதரிக்கமட்டேன். மத்தியில் பாஜகவோ அல்லது நரேந்திர மோடியோ ஆட்சி அமைக்க ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் எங்கள் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.