ஏழைச் சிறுவனை வெளியே தள்ளிய மெக்டொனால்ட்ஸ் ஊழியர் சஸ்பெண்ட்: கடை மூடல்
புனே: புனேவில் ஏழைச் சிறுவனை வெளியே விரட்டிவிட்ட மெக்டொனால்ட்ஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது. மேலும் சிறுவனை வெளியே தள்ளிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு கடந்த 10ம் தேதி ஷஹீனா அத்தார்வாலா என்ற பெண் சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்கு வெளியே நின்ற ஏழை சிறுவன் தனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்குமாறு ஷஹீனாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறுவனை அழைத்துக் கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

அங்கு உணவு வாங்க வரிசையில் நின்றபோது கடை ஊழியர் ஒருவர் ஓடிவந்து சிறுவனை பார்த்து இதுபோன்றவர்கள் எல்லாம் இங்கு வரக் கூடாது என்று கூறி கடைக்கு வெளியே தள்ளிவிட்டார். இந்த சம்பவம் பற்றி ஷஹீனா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது தீயாக பரவியது.
இந்த சம்பவத்தை அடுத்து மெக்டொனால்ட்ஸ் புனே கடையை மூடிவிட்டது. மேலும் சிறுவனை கடையை விட்டு வெளியே தள்ளிய நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மெக்டொனால்ட்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எங்கள் கடைகளில் நாங்கள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே கிடையாது என்று மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சம்பவம் நடந்த கடை மீது சிலர் மாட்டுச் சாணத்தை வீசி தாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications