தனியார் கல்லூரிகள் மருத்துவ நுழைவு தேர்வு நடத்த முடியாது: மருத்துவ கவுன்சில் வாதம்
டெல்லி: மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு (NEET) நடத்துவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
மாநிலங்கள், தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்கள் மருத்துவ மாணவர்களுக்கு தனித்தனி நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும், நாடு முழுமைக்கும், ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கடந்த மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, தமிழகம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் என்று தெளிவாக கேட்கட்டும். ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், மொத்தம் 20 நிமிடங்கள் வழக்கு நடைபெறும் என்றும், ஒவ்வொரு மாநிலமும், ஒரு நிமிடத்தில் தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் விகாஸ்சிங் வாதம் முன் வைத்தார். அவர் கூறுகையில், மாநில அரசுகள் நடத்தும் கல்லூரி தவிர பிற மருத்துவ கல்லூரிகள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு வேண்டுமானால், மாநில அரசின் கல்லூரிக்கு, அந்தந்த மாநில அரசுகளே தேர்வை நடத்தலாம். அதேநேரம், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று, மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை, திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications