சர்க்கரை இறக்குமதிக்கு தடைகோரி கரும்பு விவசாயிகள் டெல்லியில் டிச.12ல் ஆர்பாட்டம்
டெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். டெல்லி செல்லும் கரும்பு விவசாயிகளை வைகோ நேற்று வழியனுப்பி வைத்தார்
சர்க்கரை இறக்குமதியை தடை செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும், கரும்பிற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தலைநகர் டெல்லியில் நடத்த டிசம்பர் 12ம் தேதி உள்ளனர்.

இதற்கு ம.தி.மு.க உள்பட பல்வேறு கட்சிகள், விவசாய சங்க தலைவர்கள் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி டெல்லி செல்வதற்காக திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை சென்டிரலுக்கு கரும்பு விவசாயிகள் வந்தனர். இவர்களை வழியனுப்ப ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார்.
பின்னர் அவர் அங்கிருக்கும் கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசினார். ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தி அவர்களை வழியனுப்பிவைத்தார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய கரும்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசகருமான அ.கணேசமூர்த்தி, தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.காசியண்ணன், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க தலைவர் வி.சண்முகராசு, தமிழ்நாடு போராட்டக்குழுவின் நெறியாளர் செ.அர்ச்சுணன் மற்றும் சர்க்கரை ஆலை விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications