மீரட் கற்பழிப்பு.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜ்நாத் மகன், இந்து மகாசபை தலைவர் ஆறுதல்!
மீரட்: மீரட் அருகே மதராசாவுக்கு தூக்கிச் சென்று கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் நீரஜ் சிங் மற்றும் இந்து மகாசபைத் தலைவர் சுவாமி சக்ரபாணி ஆகியோர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளம் பெண் ஆசிரியர் ஒருவரை சிலர் மதராசாவுக்கு கடத்திச் சென்று கற்பழித்தனர்.
முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கும் கடத்தி சென்றதாகவும், அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் முக்கிய குற்றவாளி தப்பிவிட்டார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் நீரஜ் சிங் மற்றும் இந்து மகாசபைத் தலைவர் சுவாமி சக்ரபாணி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அப்பெண்ணின் தாயாருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக உள்ளது," என்றார்.
மேலும் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்துவிட்டதற்கு இது ஒரு பெரிய உதாரணம் என்றார் இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி.