செக்ஸ் தொந்தரவு புகாரில் மேகாலயா ஆளுநர் தமிழகத்தின் சண்முகநாதன்- ராஜ்பவன் கிளப்பானதாக குற்றச்சாட்டு!
மேகலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. நேர்முக தேர்வுக்கு வந்த இளம்பெண்ணுக்கு சண்முகநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பது புகார்.
ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதேபோல் ராஜ்பவனை இளம்பெண் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றிவிட்டதாக ஊழியர்களும் குற்றம்சாட்டி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள்ளதாகவும் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் மேகலாயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகரான சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
மேகலாயா மாநில ஆங்கில நாளேடான "Highland Post" நேற்று முன்தினம் தலைப்புச் செய்தியாக, நேர்முக தேர்வுக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆளுநர் மீது புகார் என்ற தலைப்பில் சண்முகநாதன் படத்துடன் செய்தி வெளியிட்டது. இது வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் தொந்தரவு
அச்செய்தியில், மேகலாயா ஆளுநர் மாளிகைக்கான பிஆர்ஓ பணிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. 2 கட்ட நேர்முக தேர்வுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 7-ந் தேதி ஆளுநர் சண்முகநாதன் தனிப்பட்ட முறையில் நேர்முகத் தேர்வு நடத்தினார். அதில்தான் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என கூறப்பட்டிருந்தது.
சண்முகநாதன் மறுப்பு
இதையடுத்து மேகலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள செய்தியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியை சண்முகநாதன் திட்டவட்டமாக மறுத்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்களை தாம் மகள்களாக, பேத்திகளாக பார்ப்பதாகவும் வேலை கிடைக்காதவர்கள்தான் இத்தகைய பொய்ச் செய்தியை பரப்புவதாகவும் சண்முகநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
மாநில அரசிடம் புகார்
இந்த நிலையில், ஆளுநர் மீதான புகார் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் சட்ட ரீதியாக கருத்து கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தெரிவித்திருந்தார்.
ஊழியர்கள் போர்க்கொடி
இதனிடையே மேகலயா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணிபுரியும் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது சண்முகநாதனை நீக்க கோரியுள்ளனர். ராஜ்பவனின் அதிகாரிகள் முதல் பியூன் வரையிலான ஊழியர்கள் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
லேடீஸ் கிளப்பானது ராஜ்பவன்
அந்த கடிதத்தில், ராஜ்பவனின் கண்ணியத்தை சண்முகநாதன் சீர்குலைத்துவிட்டார்; ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவும் மாற்றிவிட்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சண்முகநாதன் மீதான பகீர் புகார்கள் குறித்து விசாரிக்க மேகலயா மாநில என்ஜிஓக்கள் கோரிக்கை விடுத்து வருவதால் பரபரப்பு தொடருகிறது.