எல்லாம் சரிதான்.. முதலில் காஷ்மீரில் அடக்குமுறையை நிறுத்துங்க..பிரதமருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் முதலில் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
காஷ்மீரின் எதிர்காலம் வளர்சி திட்டம் தொடர்பாகவும், அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

மோடியிடம் கோரிக்கை
தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய 14 குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.மூன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீண்டும் கொடுக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் நில உரிமையை மதிக்க வேண்டும், அங்கு மாநில தேர்தல் நடத்த வேண்டும் என்று குப்கர் கூட்டணி தலைவர்கள் ஒருசேர பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

மெஹபூபா முப்தி பேட்டி
அப்போது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி சாதகமான பதில்களை கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியதாவது:- பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒன்றும் பிரச்னை இல்லை.

மத்திய அரசுக்கு பொறுப்பு
டெல்லியை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்த பேச்சுவார்த்தையை செயல் முறையாக மாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடமே இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

அடக்குமுறையின் சகாப்தம்
ஜம்மு-காஷ்மீரில் அடக்குமுறையின் சகாப்தம் முதலில் முடிவுக்கு வர வேண்டும். கருத்து வேறுபாடு கொண்ட குரல் ஒரு குற்றச் செயல் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்றப்பட்ட கடுமையான உத்தரவுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். வேலைகள் மற்றும் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மெஹபூபா முப்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications