ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா முஃப்தி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மெகபூபா பதவியேற்றால் ஜம்மு காஷ்மீரத்தின் முதலாவது பெண் முதல்வராவார்.
ஜம்மு காஷ்மீரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று முப்தி முகமது சயீத் காலமானார். இதனைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முப்தி முகமது சயீத் மகள் மெகபூபா முஃப்தியை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க உள்ளனர். இருப்பினும் இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
1996ஆம் ஆண்டு தந்தையுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் மெகபூபா முஃப்தி. 56 வயதாகும் மெகபூபாதான், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்.
தற்போதைய நிலையில் 87 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர சட்டசபையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28; பாஜகவுக்கு 25; தேசிய மாநாட்டு கட்சிக்கு 15; காங்கிரஸுக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை மெகபூபாவையே அடுத்த முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான முசாஃபர் ஹூசைன் உறுதி செய்துள்ளார்.
அப்படி ஜம்மு காஷ்மீரத்தின் முதல்வராக மெகபூபா முஃப்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்தான் ஜம்மு காஷ்மீர மாநிலத்தின் முதலாவது பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெறுவார்.












Click it and Unblock the Notifications