டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதைப் போல பாஜகவும் வீழ்த்தப்படும்: மெகபூபா முப்தி
ஶ்ரீநகர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதைப் போல இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் தோற்கடிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் மெகபூபா முப்தி கூறியதாவது:
அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள். டொனால்ட் டிரம்ப் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதேநிலை பாஜகவுக்கும் ஏற்பட வேண்டும்.
சரியான வியூகம்
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மெகா கூட்டணி அமைத்தது வியூகம் பாராட்டுக்குரியது. பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
விற்பனை செய்யும் பாஜக
ஜம்மு காஷ்மீரின் வளங்கள் இப்போது விற்பனை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்கள். பண்டிட்டுகளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? ஜம்மு காஷ்மீரை பாஜக விற்பனை செய்கிறது.
இளைஞர்கள் ஆயுதம் ஏந்துகின்றனர்
ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். கடந்த காலங்களைவிட தீவிரவாத இயக்கங்களில் ஆட்சேர்ப்பு இம்முறை அதிகரித்துள்ளது. பிற மாநில மக்கள் ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
அமைதிக்கான பாலம்
எல்லையில் யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் தொடர்ந்து மீறப்படுகின்றன. இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடிக்காக ஜமு காஷ்மீரின் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழை இழந்துள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அமைதிக்கான பாலமாக ஜம்மு காஷ்மீர் இருக்க வேண்டும்.
3370வது பிரிவு நீக்க விவகாரம்
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு என்பது இந்துக்களோடும் முஸ்லிம்களோடும் இணைந்தது அல்ல. ஜம்மு காஷ்மீரின் அடையாளத்தை பாதுகாக்கக் கூட்டியதாக 370வது பிரிவு இருந்தது. இப்போது இந்த மண்ணின் மக்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மட்டும் அவர்கள் ரத்து செய்யவில்லை. அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தையே தூக்கிவீசிவிட்டனர். இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார்.