நடுக்கடலில் தத்தளிக்கும்“ஜிண்டால் காமாட்சி”- 20 கப்பல் ஊழியர்கள் பத்திரமாக மீட்பு
மும்பை: கொச்சியில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த வர்த்தக கப்பலில் திடீரென விரிசலில் ஏற்பட்டது.
இதையடுத்து கப்பல் மற்றும் அதில் உள்ள 20 ஊழியர்களை காப்பாற்றும் முயற்சியில் கடற்படை ஹெலிகாப்டர் ஈடுபட்டு அவர்களை மீட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் மும்பை துறைமுகத்தில் இருந்து அரபிக் கடலில் வட மேற்கில் 40 கடல்மைல் தொலைவிலும், வசையில் இருந்து 25 கடல் மைல் தொலைவிலும், ஜிண்டால் காமாட்சி என்ற அந்த கப்பல் சென்றுகொண்டிருந்த போது திடீரென அதில் விரிசல் ஏற்பட்டது.
இது குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கப்பலில் உள்ள 20 பணியாளர்களை காப்பாற்ற "சீ கிங்" ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக கடற்படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரிசல் காரணமாக கப்பல் எந்நேரமும் மூழ்கிவிடும் ஆபத்து உள்ளது. இதனையடுத்து 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலில் விரிசல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கப்பல் மூழ்கினால் எண்ணெய் கசிந்து கடல் மாசுபாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.