குடிக்க தண்ணீர் இல்லை.. குடும்பத்தோடு பெங்களூர், மும்பைக்கு இடம் பெயரும் வட கர்நாடக மக்கள்!
பெங்களூர்: கடுமையான வெயில், அதன் காரணமாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், வட கர்நாடக மாவட்ட மக்கள் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று, கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
நிலம், வீடு எல்லாம் இருந்தும்கூட, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், வெயிலில் இருந்து தப்பிக்கவும் இவ்வாறு ஆயிரக்கணக்காக வெளியேறும் மக்கள் மீண்டும், தங்கள் சொந்த ஊர் திரும்பவே விரும்புகிறார்கள்.
குல்பர்க்கா, ரெய்ச்சூர், பீதர், பெல்லாரி உள்ளிட்ட வடக்கு கர்நாடக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம்
வட கர்நாடக பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக, இப்போதே, 44 டிகிரி செல்சியசை ஒட்டியுள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது.

கட்டுப்படவில்லை
ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் அதிகபட்சமாக 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கும் ஏழை, எளிய வட கர்நாடக மக்களால், இந்த விலைக்கு குடிநீர் வாங்கி கட்டுப்பிடியாகவில்லை.

மும்பை, பெங்களூர் ஓட்டம்
இதையடுத்து ரயில்களில் பெங்களூர், மைசூர், மும்பை என ஊரை மாற்றிக்கொண்டு குடும்பத்தோடு வெளியேறி வருகிறார்கள். சொந்த ஊரில் நிலம், ஆடு, மாடுகள், சொந்த வீடுகள் என இருந்தபோதிலும், இவர்களால் தண்ணீர் தட்டுப்பாட்டை தாங்கிக்கொண்டு இருக்க முடியவில்லை.

கூலி வேலை
பல குடும்பங்கள் ஆடு, மாடுகளை விற்பனை செய்துவிட்டு, பிற நகரங்களை நோக்கி குடும்பத்தோடு செல்கிறார்கள். பெங்களூரிலுள்ள கட்டுமான நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

தண்ணீர்
இதுகுறித்து, இடம் பெயர்ந்து வந்த சிலரிடம் கேட்டபோது, எங்களால் சொந்த ஊரை விட்டுவிட்டு இருக்க முடியாது. ஆனால், அங்கு இருந்தால், தண்ணீர் கிடைக்காமல் செத்துப்போவோம் என்ற பயத்தில் ஊரை விட்டு ஓடி வந்துள்ளோம். மழைக்காலம் தொடங்கிய பிறகுதான் சொந்த ஊர் பக்கம் போக முடியும்.

மழை பெய்தால்தான்
இந்த நிலைக்கு யாரையும் குற்றம்சாட்ட போவதில்லை. விதிதான் இவ்வாறு அடுத்தடுத்த இரு ஆண்டுகளாக மழை இன்றி எங்களை தவிக்க செய்துள்ளது. இவ்வாறு அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நிரம்பி வழியும் ரயில்கள்
இதுபோன்ற இடப்பெயர்வு காரணமாக, வட கர்நாடகாவில் இருந்து தினமும் பெங்களூருக்கு வரும் ரயில்களில் முன்பதிவற்ற வகுப்புகளில் கூட்டம் பிதுங்கி வழிகிறது. மும்பை செல்லும் ரயில்களிலும் நிலைமை இப்படித்தான் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications