தேசியக்கொடி ஏற்றிவிட்டு மேடைக்கு போனதும் சரிந்து விழுந்த அமைச்சர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்னாச்சு?
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது சுகாதார அமைச்சர் பிரபுராம் சவுத்ரி மற்றும் சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கவுதம் ஆகியோர் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். அந்தந்த மாநிலங்களில் மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினர்.

மேலும், மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தேசியக்கொடி ஏற்றினர். அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவில் தேசியக்கொடி ஏற்றிய அமைச்சர் பிரபுராம் சவுத்ரி, பின்னர் உரையாற்றியபோது திடீரென மயங்கி, நிலைதடுமாறி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த அதிகாரிகளும், நிர்வாகிகளும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அமைச்சர் பிரபுராம் சௌத்ரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீரானது. ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அமைச்சர் பிரபுராம் சௌத்ரி நலமுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல, மத்திய பிரதேசத்தின் மௌகஞ்சில் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கிரிஷ் கௌதம் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் மேடையில் உரையாற்றும்போது நிலை தடுமாறினார்.
அப்போது சுதாரித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை தாங்கிப் பிடித்து நாற்காலியில் அமர வைத்தனர். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு, சபாநாயகர் கிரிஷ் கவுதமுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications