ஒரு வாரத்தில் 4 பேரைக் கொன்ற புலியை சுட்டுத் தள்ள அமைச்சர் உத்தரவு
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் புலி தாக்கி ஒரு வாரத்தில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹெச்.டி. கோட்டே தாலுகாவில் உள்ளது சிக்கபர்கி காடுகள். இந்த காட்டுப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் புலி தாக்கி 2 பேர் பலியாகினர். மேலும் கடந்த சனிக்கிழமை நாகர்ஹோலே காட்டுப்பகுதியில் ஒருவர் புலி தாக்கி உயிர் இழந்தார்.

இந்நிலையில் பசப்பா(55) என்ற விவசாயி தனது கால்நடைகளை பந்திபூர் புலிகள் சரணாலயம் அருகில் உள்ள ஹெடியாலா வனச்சரகப் பகுதிக்கு நேற்று மாலை அழைத்துச் சென்றார். அப்போது அவர் புலி தாக்கி பலியானார். அவரது குடும்பத்தாருக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு அறிவித்துள்ளது.
பசப்பாவை கொன்ற புலி தான் சீகேவடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான செலுவா மற்றும் நதாதிஹாடியைச் சேர்ந்த பசவராஜ் ஆகியோரையும் கொன்றது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பந்திபூர்-நாகர்ஹோலே பகுதியில் 180 புலிகள் உள்ளன. இந்த பகுதியைச் சுற்றி 300 கிராமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பேரின் உயிரை எடுத்த அந்த புலியை கண்டதும் சுட்டுக் கொல்ல கர்நாடக மாநில வனத் துறை அமைச்சர் ராமநாத் ராய் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் புலி தாக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications