நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த விளக்கம் என்ன?
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புக்கு விமர்சனம் எழுந்ததையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு வகைகளில் முறைகேடுகளைச் செய்து கடன் பெற்றுள்ளனர். உள்நோக்கத்துடன் கடன் பெற்றிருந்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?' எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன், தள்ளுபடி பெறப்போகும் பயனாளிகளை இறுதி செய்வது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கடந்த 28 ஆம் தேதி அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், பொது நகைக்கடன்களை ஆய்வு செய்ததில் 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 கடன்களுக்கு மட்டும் அரசாணையில் உள்ள நிபந்தனைகளின்படி நகைக்கடன் தள்ளுபடியை பெறாத நேர்வுகள் என முடிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அரசின் இந்த முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். இதுதொடர்பாக எந்த நிபந்தனைகளையும் தி.மு.க தலைவர் விதிக்கவில்லை' என்கிறார்.
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
மேலும், நகைக்கடன் பெற்றவர்களில் 75 சதவீத பயனாளிகளுக்குத் தள்ளுபடி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்தச் செயல் மூலம் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடனாளியாக மாறிவிட்டனர். இதற்கு தி.மு.க அரசுதான் காரணம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்தார். அவர் பேசுகையில், தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கடனில் தத்தளித்தாலும் நகைக்கடன் தள்ளுபடியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதல்வர் அறிவித்தார். ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் அரசு குறைவாகக் கொடுத்துள்ளதாக சித்தரிப்பது உண்மைக்கு மாறானது.'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நகைக்கடன் தள்ளுபடியை எப்படிக் கொடுக்க முடியும் என சிலர் நினைத்தார்கள். முதலமைச்சர் கடுமையான நெருக்கடியிலும் ஏழை மக்களுக்காக தள்ளுபடி செய்திருக்கிறார். மேலும், 48 லட்சம் நகைக்கடன்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொடுத்துள்ளனர். இது நபர்களின் எண்ணிக்கை அல்ல, நகைக்கடன்களின் அளவு. நாற்பது கிராம் அதாவது ஐந்து பவுனுக்குகீழ் உள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் கூறினார். அவர் அறிவித்ததை செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளார். நாற்பது கிராமுக்கு மேல் உள்ள எண்ணிக்கையும் இந்த 48 லட்சத்தில் அடங்கும். இதைப் புரியாமல் சிலர் பேசுகிறார்கள்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களில் 2 லட்சம் பேர் கோடிக்கணக்கில் நகைக்கடன் பெற்றுள்ளனர். அவர்களின் ஏஏஒய் அட்டையைப் பயன்படுத்தி குறுக்குவழியில் சிலர் கடன் பெற்றுள்ளனர். வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் அட்டைகளைப் பெற்று நகை அடமானக் கடைக்காரர்கள்தான் கடன்களைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்பவர் 672 நகைக்கடன்களை வாங்கியுள்ளார். அதுவும் ஐந்து சவரனுக்குக்கீழ்தான் ஒவ்வொரு கடனையும் பெற்றுள்ளார். இது எப்படி சரியாகும். மக்களின் வரிப்பணத்தை திருட்டுத்தனமாக பெற்றுள்ளனர். இதனை ஓ.பி.எஸ் ஆதரிக்கிறாரா?'' எனக் கேள்வியெழுப்பினார்.
ஏஏஒய் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் நகைக்கடன் பெற்றுள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெறும் பையை மட்டும் கொடுத்து 203 நகைப் பொட்டலங்கள் இருப்பதாகக் கணக்கு காட்டி 2 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நகையே இல்லாமல் கடன் கொடுத்துள்ளனர். கவரிங் நகைகளை வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இதுதவிர, பல்வேறு வகைகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். கடன் தள்ளுபடி பெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பெற்றிருந்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?
அந்தவகையில், 48 லட்சம் நகைக்கடன்களை ஆய்வு செய்ததில் 5 பவுனுக்கு மேல் தகுதிபெறாத வகையில் 35 லட்சம் நகைக்கடன்கள் வருகின்றன. ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு மேல் நகைக்கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யவில்லை. ஒரு குடும்பம் என்ற கணக்குதான் வரும். ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தால் அவர்கள் அத்துணை பேரும் நகைக்கடன் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் திட்டமிட்டே ஐந்து சவரனுக்குக்கீழ் நகைக்கடன் பெற்றுள்ளனர்'' என்கிறார் ஐ.பெரியசாமி.
மேலும், முழுக்க ஆய்வு செய்து முறைகேடுகளைக் களைந்து 40 கிராமுக்குக்கீழ் உள்ள மக்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒரு மில்லிகிராம் கூடுதலாக வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பில்லை. கூட்டுறவு சங்களில் 22 லட்சம் பேர் 48 லட்சம் நகைக்கடன்களை வாங்கியுள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 18 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். அதாவது 50 சதவிகிதம் பேருக்கு பலன் கிடைக்கவுள்ளது'' என்கிறார்.
நிபந்தனைகளை கூறினீர்களா என ஓ.பி.எஸ் கேட்கிறார். 5 சவரனுக்குக்கீழ் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றோம். ஒரே வீட்டில் 100 கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்ய முடியுமா?'' எனக் குறிப்பிடும் ஐ.பெரியசாமி, லட்சக்கணக்கான கடன்கள் எல்லாம் ஒரே நபர், ஒரே ஆதார் அட்டை எனக் காட்டி பல வங்கிகளில் நூற்றுக்கணக்கான கடன்களை வாங்கியுள்ளனர். நகை அடகுக்காரர்கள், தங்களில் உள்ள நகைகளை 5 பவுனுக்குக்கீழ் திட்டமிட்டு வாங்கியுள்ளனர். ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து தள்ளுபடி செய்துள்ளோம். எந்தத் தவறுக்கும் நாங்கள் இடம்கொடுக்கவில்லை.
பயிர்க்கடனிலும் இதேபோல் அ.தி.மு.கவினர் செய்துள்ளனர். ஒரு ஏக்கர் நெல் சாகுபடி நிலத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளவர், ஏழு ஏக்கர் நிலம் இருப்பதாகக் காட்டி கடன் வாங்கியுள்ளார். அந்தவகையில் 2,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர். நகைக்கடன் வேறு, பயிர்க்கடன் வேறு. தி.மு.க ஆட்சி வராது எனத் திட்டமிட்டு இவர்கள் செயல்பட்டுள்ளனர். சொசைட்டிகளின் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.கவினர் உள்ளனர். ஒரே நபர் 5 கோடியே 85 லட்ச ரூபாயை நகைக்கடனாகப் பெற்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது. தருமபுரி, சேலத்தில் நடைபெற்றதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். இந்த அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது'' என்கிறார்.
மேலும், சிறு,குறு விவசாயிகளுக்கு 2016 அ.தி.மு.க ஆட்சியில் தள்ளுபடி செய்தனர். அதற்காக விவசாயிகளை இரண்டாகப் பிரித்து நிபந்தனைகளை விதித்தனர். 12 லட்சம் பேருக்கு கொடுத்தனர். ஆனால், தி.மு.க ஆட்சியில் 22 லட்சம் பேருக்கு பாரபட்சம் பார்க்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. நாற்பது கிராமுக்குக்கீழ் வைத்த தகுதியுள்ள நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 பவுனுக்குக்கீழ் வைத்தவர்கள் எல்லாம் ஏழைகள். பணக்காரர்கள் எல்லாம் கொள்ளைக்காரர்களாக நுழைந்தனர். இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதைத்தான் நாங்கள் கணக்கெடுத்தோம்'' என்கிறார்.
அரசு ஊழியர்களுக்குத் தள்ளுபடி இல்லை என்கிறீர்களே?' என செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். வருமான வரி கட்டுகிறார்கள். அவர்களுக்குத் தள்ளுபடி என அறிவிக்கவில்லை. அரசு ஊழியர்கள், வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் என அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகிகள், அதில் பணியாற்றுகிறவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது'' என்றார்.
அரசு ஊழியர்களில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் இல்லையா?' எனக் கேட்டபோது, அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு எவ்வளவு என உங்களுக்குத் தெரியும். தற்காலிக பணியாளர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல. தகுதியுள்ளவர்கள் தள்ளுபடி கோரலாம். இதுவரையில் எந்த அரசும் இந்தியாவில் இப்படியொரு தள்ளுபடியை செய்யவில்லை. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுதான் முதல்முறை. மத்திய அரசின் திட்டங்களில் எத்தனையோ நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஐந்து பவுன் என வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றுகிறோம். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வகையில் 170 சொசைட்டிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். கிரிமினல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
பிற செய்திகள்
- “டெல்டா மற்றும் ஒமிக்ரான் சேர்ந்து கோவிட் – 19 பேரலையை உருவாக்கி வருகிறது” – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- குற்றவாளிகள் என கருதுபவர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தும் சீனா
- இந்த ஆண்டில் முதன் முறையாக நடந்த நிகழ்வுகள் என்னென்ன?
- மொரிஷியஸ் தீவு ஏன் தன் கிளிஞ்சல்களை இழந்துகொண்டிருக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














Click it and Unblock the Notifications