சசிகலா, தினகரனை நம்பி நாங்க இல்லைங்க - ஜெயக்குமார் பொளேர்
சசிகலா, தினகரனைச் சார்ந்து தமிழக அரசு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கூறியுள்ளார்.
டெல்லி : சசிகலா மற்றும் தினகரனைச் சார்ந்து தமிழக அரசு இல்லை. எங்கள் ஆட்சி அம்மாவின் வழியில் தனித்து இயங்குகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், டிடிவி தினகரன் நிர்வாகிகள் நியமனம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், டிடிவி. தினகரன் கட்சியில் குழ்ப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறினார்.
யாரை நம்பியும் நாங்கள் இல்லை. முக்கியமாக சசிகலா, தினகரனை நாங்கள் இல்லை என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

அண்ணன் ஓபிஎஸ்
ஆளும் அதிமுக அரசு ஜெயலலிதா வழியில் தொடர்கிறது. இது அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் தெரியும். எனவே அவர் விரைவில் வந்து இணைவார். ஒன்றிணைந்து ஆட்சியை தொடருவோம்.

யாரை நம்பியும் இல்லை
சசிகலா, தினகரனை நம்பி எடப்பாடி பழனிச்சாமி அரசு இல்லை. சசிகலா, தினகரன் தொடர்பை தவிர்த்துவிட்டு தாங்கள் சுயமாக செயல்படுவோம். ஜெயலலிதாவின் ஆட்சியையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர்கிறது என்றும் கூறினார்.

மக்கள் விரும்பவில்லை
சசிகலா தலைமையை அதிமுகவினர், பொதுமக்கள் விரும்பவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் நடைபெறுகிறது. அணிகள் ஒன்றுபட்டு ஆட்சி தொடரும் என்றார்.

கருத்து சொல்ல முடியாது
பொதுச்செயலாளர் பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பதில் கூற முடியாது என்று கூறினார்.

தினகரன் நியமனம்
முன்னதாக ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முன் சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் நியமனமே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கையில் உள்ளது. அப்படி இருக்கையில் பொதுச்செயலாளர் சசிகலா நியமித்த தினகரனின் நியமனம் எப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications