மாணவர்களை கடத்தி ஆம்னஸ்டிக்கு எதிரான போராட்டத்தில் இறக்கிய பாஜகவின் மாணவர் அமைப்பு- போலீஸ் வழக்கு
பெங்களூரு: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பினரை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர் பாஜகவின் மாணவர் அமைப்பாகிய ஏபிவிபியினர். போராட்டத்தின் போது மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளி ஒன்றில் நுழைந்த அவர்கள், வலுக்கட்டாயமாக மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளனர். இதனையடுத்து ஏபிவிபியினர் மீது மாணவர்களை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தியக் கூட்டத்தில் காஷ்மீருக்கு ஆதரவாக கோஷம் எழும்பியதாகக் கூறி அந்த அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்று ஏபிவிபியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அந்த அமைப்பின் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏபிவிபியினரின் தொடர்ப் போராட்டத்தால் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் டெல்லி, பெங்களூரு, மும்பை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் ஏபிவிபியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூர் ராஜாஜிநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் கூட்டமாக ஏபிவிபியினர் நுழைந்துள்ளனர். கல்லூரி முதல்வர் எவ்வளவோ தடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சிறுவர் சிறுமிகளை போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்கவும் செய்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவர்களை தவறான வழியிலும் வலுக்கட்டாயமாகவும் அழைத்துச் சென்ற ஏபிவிபியினர் மீது, கல்லூரியின் முதல்வர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கலவரம் செய்தது மற்றும் சிறுவர் சிறுமியரை கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏபிவிபியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications