சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: ரூ 1 கோடியை திருப்பித் தந்த மிதுன் சக்ரவர்த்தி!
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் ரூ 1 கோடியை திருப்பித் தந்துள்ளார் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி.
மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பிரபல இந்தி நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது.
இந்த நிதி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டதால் அவருக்கும் மோசடியில் பங்கிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கடந்த மாதம் அவரிடமும் அமலாக்க பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, விளம்பர தூதராக செயல்பட்டதற்காக சாரதா நிதி நிறுவனம் தனக்கு வழங்கிய ரூ.1 கோடியே 19 லட்சத்தை விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாக அவர் உறுதியளித்தார்.
அதன்படி நேற்று கொல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் உள்ள அமலாக்க பிரிவின் அலுவலகத்தில், தனது வக்கீலுடன் ஆஜரான நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ரூ.1 கோடியே 19 லட்சத்துக்கான வரைவோலையை அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் வழங்கினார்.