மனைவியை கொல்ல.. மனித வெடிகுண்டாக மாறிய கணவன்... நடந்த விபரீதம்.. மிரண்டு போன போலீஸ்
அய்சால்: மனைவியை கொல்ல அரிவாளை தூக்குவது, கழுத்தை நெரிப்பது போன்ற முறைகளுக்கு பதிலாக மனித வெடிகுண்டாக கணவன் மாறியதுடன், திட்டமிட்டபடி மனைவியை கொன்றது மிசோரம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பெரும்பாலான கணவன் மனைவி இடையேயான கொடூர குற்றங்களுக்கு மது, மனம் ஒத்துப்போகாமை, கள்ளக்காதல் உள்ளிட்டவை காரணமாக இருக்கும்.
அதேநேரம் காதலித்து கல்யாணம் என்றால் ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என 90 நாளுக்கு மேல் வாழ்க்கையின் எதார்த்தத்தை யோசிக்கும் காதல் ஜோடிகள், தனக்கு பிடிக்காத விஷயத்தை அவன் அல்லது அவள் செய்யும் போது பிரச்சனை ஆரம்பிக்கும்.

எப்படி நடக்கும்
அப்படி ஆரம்பிக்கும் பிரச்சனைகளுக்கு நடுவில், பொருளாதார பலவீனமும் அங்கு இருந்தாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாத நிலை இருந்தாலோ , நிச்சயம் அது சிக்கலில் தான் முடியும். அப்படியும் பல குற்றங்கள் நடந்துள்ளது காதலித்த பெண்ணை கொன்ற கணவன், காதல் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவங்கள் அதிகமாக நடக்கும். அப்படி நடக்கும் கொலைகள் பொதுவாக வெட்டுதல், கழுத்தை நெறித்தல், பெட்ரோல் ஊற்றி எரித்தல், விஷம் வைத்து கொல்லுதல் அல்லது கத்தியால் குத்துதல் போன்ற ஸ்டைலில் நடக்கும்,

மிசோரம்
இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரு கணவன், தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது 61 வயது மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கொன்றிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கணவன்
மிசோரம் மாநிலம், லுங்க்லேய் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோமிங்கிலினா (62). இவருடைய மனைவி பை லாங்தியாங்லிமி (61). தனது முதல் கணவரை பிரிந்த இவர், ரோமிங்கிலினாவை 2வது திருமணம் செய்தார். இவருக்கு முதல் கணவரின் மூலமாக பிறந்த மகள் (40) இருக்கிறார். தங்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக, கணவனும், மனைவியும் கடந்தாண்டு பிரிந்தனர்.

நேரில் வந்தார்
சன்மாரி வெங் என்ற பகுதியில் தனது மகளுடன் சேர்ந்து யாங்லிமி காய்கறி கடை நடத்தி வந்திருக்கிறார். தன்னை பிரிந்து சென்ற மனைவியை கொல்ல நினைத்த ரோமிங்கிலினா, நேற்று முன்தினம் நள்ளிரவு அவருடைய கடைக்கு சென்றார். காய்ச்சல் அடிப்பதாக யாங்லிமியிடம் கூறிய அவர், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீடி ஒன்றை சுருட்டித் தரும்படி கேட்டார்.

வெடித்தது
யாங்லிமியும் பரிதாபப்பட்டு, பீடி சுற்றி கொடுத்தார். பீடியை பற்ற வைத்த ரோமிங்கிலினா, தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக யாங்லிமியை கட்டிப்பிடித்து உருண்டார். திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

மனைவியும் பலி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், 'ரோமிலிங்கிலினா, தனது உடம்பில் ஜெல்லட்டின் வெடிபொருள் குச்சிகளை கட்டி சென்றுள்ளார். மனைவியை கட்டிப் பிடித்ததும் பீடி நெருப்பின் மூலம் அவற்றை வெடிக்க செய்துள்ளார். இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர். மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கணவன் கொன்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications