ஆளுநரிடம் மனு... எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்.. கர்நாடகா, உத்தரகாண்ட்டில் நடந்தது என்ன?
கர்நாடகா, உத்தரகாண்ட்டில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவரங்களை விவரிக்கிறது இச்செய்தி.
Recommended Video

சென்னை/பெங்களூரு/ டேராடூன்: மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது, முதல்வரை மட்டும் மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளிப்பது, அப்படி மனு அளிக்கும் எம்.எல்.ஏக்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்வது என்கிற புதிய அரசியல் பாணி அண்மைக்காலமாக நடந்தேறி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் 2010-ம் ஆண்டு முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது 11 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் எடியூரப்பாவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆதரவை வாபஸ் பெற்ற காரணத்தால் 16 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த போபையா தகுதி நீக்கம் செய்தார். இத்தகுதி நீக்கத்தை எதிர்த்து 16 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கர்நாடகா சபாநாயகர் உத்தரவு ரத்து
இதை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2011-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கர்நாடகா சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. அத்துடன் அரசியல் சாசன மதிப்பீடுகள் மற்றும் இயற்கை நீதியை பொருட்படுத்தாமல் சபாநாயகர் உத்தரவிட்டிருந்ததாகவும் உச்சநீதிமன்றம் சாடியது.

சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு
கர்நாடகா பாணியில் 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்றக் கோரி 9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். கர்நாடகாவைப் போல ஆளுநரிடம் முதல்வரை மாற்ற கோரி மனு அளித்தனர். போர்க்கொடி தூக்கிய 9 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார் அம்மாநில சபாநாயகர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று ஆளுநரிடம் மனு அளித்ததாக காங்கிரஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட வாதத்தை நீதிமன்றங்கள் ஏற்றன. அதனால் அந்த 9 எம்.எல்.ஏக்களும் கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்தன தீர்ப்புகள்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
கர்நாடகா, உத்தரகாண்ட் போல தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள். இந்த 18 பேரும் ஆட்சியை கவிழ்க்க தினகரனுடன் சேர்ந்து சதி செய்தனர் எனக் கூறி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இன்று ஆளுநரிடம் மனு கொடுத்த காரணத்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். இதனால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 3-வது நீதிபதியின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications