செல்போன் கட்டணத்தை 15 % உயர்த்த முடிவு... மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிறுவனங்கள்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிகரிப்பால் செல்போன் கட்டணத்தை உயர்த்த செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு 12 முதல் 15 சதவீதம் வரை இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தகவல் தொடர்பிற்கு முக்கிய பங்காற்றும் செல்போன், வயது வித்தியாசமின்றி அனைவர் கையிலும் விளையாடுகிறது. ஒரு செல்போன் வைத்திருந்ததே அதிசயமாகப் பார்க்கப் பட்ட காலம் போய், ஒரே செல்லில் இரண்டு நம்பர்கள், ஒருவரிடமே இரண்டுக்கும் மேற்பட்ட போன்கள் என மனிதர்களின் ஆறாம் விரலாய் செல்போன் மாறி விட்டது.
செல்போன் வந்தபிறகு, முக்கிய நம்பர்களைக் கூட நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அனைத்திற்கும் நாம் செல்போனையே நம்பி உள்ளோம்.
எனவே, வாடிக்கையாளர்களைக் கவர மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஏலம்...
இந்நிலையில், இந்த ஆண்டு செல்போன் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களாக நடந்தது. அதில், ஸ்பெக்ட்ரம் கடந்த முறையைக் காட்டிலும் பல மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலம் போய் உள்ளது.

மத்திய அரசு மறுப்பு...
எனவே செல்போன் கட்டணம் உயரும் என கடந்த வாரம் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது.

கட்டண உயர்வு...
இந்நிலையில், தற்போது செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிக தொகைக்கு சென்று இருப்பதால் செல்போன் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம்...
தற்போது செல்போன் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தில் 13 முதல் 14 சதவீதம் வரை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான பயன்பாட்டுக் கட்டணத்துக்கு செலுத்த வேண்டி உள்ளது.

அனுமதிக்காக காத்திருப்பு...
எனவே, செல்போன் கட்டணத்தை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு காத்து இருப்பதாக செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

செலவினங்கள் அதிகரிப்பு...
மேலும், செல்போன் நிறுவனங்களுக்கு பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும், எனவே கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டிராய் முடிவு...
இது தொடர்பாக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த வாரம் கூறுகையில், ‘‘செல்போன் கட்டண விகிதத்தை மத்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்' அமைப்புதான் முடிவு செய்யும். ஒரு நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications