கர்நாடக வன்முறை சம்பவங்கள் குறித்து மோடி கவலை- இருமாநில மக்களும் அமைதி காக்க வேண்டுகோள்! #cauvery
டெல்லி: காவிரி பிரச்சனையை முன்வைத்து கர்நாட்காவில் வெடித்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகா மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்க கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகள் உச்சகட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களை கண்டதும் தாக்குகின்றனர்... தமிழக வாகனங்கள் கண்ணில்பட்டால் தீக்கிரையாக்கிவிடுகின்றனர்..
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் வன்முறை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் அறிக்கை:

பாதிக்கிறது...
அன்புள்ள சகோதர, சகோதரிகளே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும் நிலவும் அசாதரண சூழல் வேதனை அளிக்கிறது. இது தொடர்பான வன்முறைகள் என்னை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளன.

சட்டம்... பேச்சுவார்த்தை
வன்முறையால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. ஜனநாயக நாட்டில் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும். சட்டரீதியாக பிரச்சினைகளை தீர்வு காண வாய்ப்புள்ளது. அதைவிடுத்து சட்டத்தை மீறுவது நல்லதொரு மாற்று அல்ல.

சாமான்ய மக்கள் பாதிப்பு
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடைபெறும் வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சாமான்ய மக்களே. தேசத்தின் பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன.

நிலைமையை உணர்ந்து...
இத்தேசம் எப்போதெல்லாம் இக்கட்டான சூழலை சந்தித்திருக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகா, தமிழக மக்கள் மற்ற மாநில மக்களைப் போலவே உணர்வுபூர்வமாக உறுதுணையாக இருந்துள்ளனர். அதுபோலவே கர்நாடகா, தமிழக மக்கள் தற்போதும் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொறுப்புள்ள குடிமக்களாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications