நரேந்திர மோடி சவாலானவரே.. மன்மோகன்சிங் ஒப்புதல்
டெல்லி: குஜராத் மாநில முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சவாலானவர்தான், எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். மோடி, காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து இருந்தார்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவோ, நரேந்திர மோடியை சவாலாக கருத முடியாது என்று கூறினார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மன்மோகன்சிங் கூறியதாவது:
எதிர்க்கட்சிகளை மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்களில் நானும் ஒருவன். மெத்தனத்துக்கு இடமே இல்லை. ஓர் அமைப்புரீதியான கட்சி என்ற முறையில், எதிர்க்கட்சிகளின் பலத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், காங்கிரஸ் கட்சி, வருகிற தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. நடைபெற்று முடிந்துள்ள மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் எப்படி இருந்தபோதிலும், தேர்தலை தன்னம்பிக்கையுடன் சந்திப்போம்.
மத வன்முறை தடுப்பு மசோதா, வாக்கு வாங்க செய்யப்படும் தந்திரம் அல்ல. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நாட்டின் சில பகுதிகளில் நாம் வகுப்பு கலவரங்களை பார்த்துள்ளோம். முசாபர்நகரில் என்ன நடந்தது என்பது நமக்கு ஞாபகார்த்தமாக இருக்கும்.
ஒரு நாடு என்ற முறையில், நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பதில் நாம் பெருமைப்படுகிறோம். ஆயினும், சில விதிவிலக்குகள் நடந்து விடுகின்றன. மத வன்முறை தடுப்பு மசோதா, நிறைவேற்றப்பட்டால், அந்த விதிவிலக்குகளை கட்டுப்படுத்திவிட முடியும்.
நமது அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கை திறம்பட கையாளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மத வன்முறையை தடுக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதுதான், இந்த மசோதாவின் இரண்டு முக்கிய அடிப்படை அம்சங்கள். இந்த மசோதாவை கொண்டுவர வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications