மோடி மனைவியை, அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஒப்பிட்டு காங். தலைவர் பேசியதால் கடும் சர்ச்சை!!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென்னையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் ஒப்பிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குருதாஸ் காமத் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி நேற்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் குருதாஸ் காமத் பேசியதாவது:
பிரதமர் மோடி திருமணமானவர்தான்.. இன்னமும் விவகாரத்து செய்துவிடவில்லை. ஆனால் மனைவியை கைவிட்டுவிட்டார்.. யசோதாபென் மிகச் சிறந்த பெண்மணி.. கோயில் கோயிலாக மோடிக்காக பிரார்த்தித்து வருகிறார்.
மோடியோ ஸ்மிருதி இரானி போன்ற ஒருவரை மத்திய அமைச்சராக்குகிறார்.. அவருக்கு பங்களா, முழு பாதுகாப்பு என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறார்.
ஆனால் மோடி மனைவியோ கிராமத்து பள்ளிக்கூடத்து ஆசிரியர். இப்போது பேருந்துகளிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும்தான் பயணிக்கிறார். அவரை பின் தொடர்ந்து சிறப்பு பாதுகாப்புப் படை வாகனங்களில் செல்கிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் வீட்டுக்குத் திரும்புதல் (கார் வாப்சி) குறித்தும் அவர்கள் பேசுகின்றனர். அதை தங்களது வீடுகளில் இருந்து அவர்கள் தொடங்கட்டும்.. பிரதமர் மோடி தனது மனைவியிடம் இருந்து முதலில் இதனை தொடங்கட்டும்.
இவ்வாறு குருதாஸ் காமத் பேசினார்.
பா.ஜ.க. கடும் கண்டனம்
குருதாஸ் காமத்தின் இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கல்கார் கூறுகையில், குருதாஸ் காமத் மனநிலை பிறழ்ந்தவராக பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட தாக்குதல்களையே மேற்கொள்வதையே காங்கிரஸார் தொடர்கின்றனர் என்றார்.