ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேச வேண்டாம் : மோடி அட்வைஸ்
டெல்லி: ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, 'இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்த சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சாத்வி நிரஞ்சன் மன்னிப்பு கேட்டபோதும், எதிர்க்கட்சிகள் சமாதானம் ஆகவில்லை. சாத்வி நிரஞ்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்களிடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‘சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல' என்றார்.
மேலும், ‘பெரும் பதவிகளை வகிப்பவர்கள் எதிர்காலத்தில் இது போன்ற சர்ச்சைகள் எழாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்' என வலியுறுத்திய மோடி, ‘இது போன்ற பொதுக் கருத்துகளை தெரிவிக்கும் போது நீங்கள் (எம்.பி.க்கள்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications