கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு- மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது என்று பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்றுமுன்தினம் பதவி ஏற்றது. மோடி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கறுப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு மத்திய சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், கறுப்பு பணத்தை மீட்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளோம். எங்களுக்கு இது முக்கியமான விவகாரம். கறுப்பு பண விவகாரத்தை கையாள்வதில் புதிய அரசின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது.
இக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தபோதிலும், அதில் தாமதம் ஏற்பட்டது. 28-ந் தேதி தான் கடைசிநாள். எனவே, எங்களது கொள்கை உறுதிப்பாட்டின்படி முதல் முடிவாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளோம்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
வழக்கு என்ன
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கறுப்பு பண மீட்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை 3 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் முந்தைய மன்மோகன்சிங் அரசு 3 வாரங்களுக்குள் அக்குழுவை அமைக்கவில்லை. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்தது. அந்த அவகாசமும் இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு நேற்று அமைத்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஷா
சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமை தாங்குவார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் துணைத்தலைவராக இருப்பார்.
வருவாய் செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர், உளவுத்துறை இயக்குனர், அமலாக்கப்பிரிவு அதிகாரி, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர், வருவாய் புலனாய்வு இயக்குநர், நிதி புலனாய்வு பிரிவு இயக்குனர், ‘ரா' இயக்குநர் உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
என்ன பணிகள்?
கறுப்பு பண வழக்கு விசாரணையை நடத்தும் பொறுப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் பொறுப்பு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொடங்கப்பட்ட விசாரணை, நிலுவையில் உள்ள விசாரணை, முடிக்கப்பட்ட விசாரணை ஆகியவற்றையும் அக்குழு கவனிக்கும்.
கறுப்பு பணத்துக்கு எதிரான விரிவான செயல் திட்டத்தை வகுக்கும். தனது பணி நிலவரம் குறித்து அவ்வப்போது நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications